வவுனியாவில் காதலர் தின ஒன்றுகூடல் மற்றும் நிகழ்வுகளுக்கு பொலிஸார் தடை : மீறினால் சட்ட நடவடிக்கை!!

1803

காதலர் தின ஒன்றுகூடல்..

வவுனியா மாவட்டத்தில் காதலர் தின நிகழ்வுகள் மற்றும் காதலர்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அதனை மீறி செயற்படுவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதலர் தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக காதலர் தின நிகழ்வுகள், ஒன்றுகூடல்களுக்கு பொலிஸாரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் வவுனியா மாவட்டத்தில் விருந்தினர் விடுதிகள், பொது இடங்களில் போன்றவற்றில் காதலர் தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் காதலர் தின நிகழ்வுகளை நடாத்தும் விருந்தினர் விடுதிகள், பங்குபற்றுவர்கள் மற்றும் காதலர்கள் ஒன்று கூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீறி செயற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

14ம் திகதி நாடு முழுவதும் காதலர் தினத்தை ஒட்டி சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், வெளியிலும் களியாட்ட நிகழ்வுகள் விருந்துபசாரங்கள் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டிருக்கின்றது. இவற்றை கண்காணிக்கவும், திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன்,

பொலிஸ் புலனாய்வுப் பிரிவு களமிறக்கப்பட்டிருக்கின்றது. ஹோட்டல்கள் அல்லது விருந்தினர் மாளிகைகள் காதலர் தின கொண்டாட்டங்களுக்காக தங்கள் வளாகத்தை வழங்கியதாகக் கண்டறியப்பட்டால், அத்தகைய இடங்கள் சீல் வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,

மேலும் பொதுக் கூட்டங்களைத் தடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அவை கொவிட் -19 தடுப்பு குறித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.