இலங்கையில் ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு : அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!!

1584

இழப்பீடு..

நிறுவன உரிமையாளரினால் உரிய காலத்திற்கு முன்னர் ஊழியரை பணியில் இருந்து நீக்கினால் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தியால் கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, தனியார் பிரிவில், அரசாங்க நிறுவனங்களுக்கான கூட்டுத்தாபனங்களில், சபைகள் மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்த இழப்பீட்டு வழங்கப்படும்.

வர்த்தமானி வெளியிட்ட நாள் முதல் இந்த நடைமுறை செல்லுப்படியாகும். கோவிட் தொற்று காரணமாக கடந்த காலங்களில் உரிமையாளர்களினால் பலர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளபட்ட விசாரணைக்கமைய குறித்த ஊழியர்கள் இந்த வர்த்தமானிக்கமைய இழப்பீட்டினை பெற்றுக்கொள்ள முடியும் என தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுவரை செலுத்த வேண்டிய அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையாக காணப்பட்ட 1,250,000 ரூபாய் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு இந்த தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. சரியாக 15 வருடங்களின் பின்னர் இந்த தொகை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக பிரபாத் சந்திர கீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.