புகையிரத நிலைய வீதியில்..

வவுனியா புகையிரத நிலைய வீதியில் யாசகம் செய்பவரை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோதித்தள்ளிவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளதுடன் முதியவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கிக்கு முன்பாக இன்று (15.04.2021) மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த தனியார் வங்கிக்கு முன்பாக வீதியோரத்தில் முதியவர் ஒருவர் யாசகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் . குறித்த வீதியூடாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் வீதியோரமாக யாசகத்தில் ஈடுபட்ட நபரை மோதித்தள்ளிவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் யாசகத்தில் ஈடுபட்ட முதியவர் தலையில் பலத்த காயத்துடன் வீதியில் கிடந்துள்ளார். இதனை அவதானித்த பொதுமக்கள் பொலிஸாரின் உதவியுடன் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவையூடாக படுகாயமடைந்த முதியவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

படுகாயமடைந்த யாசகத்தில் ஈடுபடும் குறித்த முதியவர் தனியார் வங்கிகளுக்கு முன்பாக இருந்து யாசகத்தில் ஈடுபடுவதாகவும் பணம் தர மறுப்பவர்களை தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுவதாகவும் இதன் காரணமாக அவர் மீது குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.





