இலங்கையின் விமான ஓடுபாதை தொடர்பாக, காணாமல் போன மலேசிய விமானத்தின் விமானி அறிந்து வைத்திருந்ததாக தகவல்!!

651

Flight

இலங்கை உள்ளிட்ட மூன்று ஆசிய நாடுகளின் விமான ஓடுபாதைகள் குறித்த தகவல்களை, காணாமல் போயுள்ள மலேசிய விமானத்தின் விமானி ஒருவர் அறிந்து வைத்திருந்தாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

பேரிட்டா ஹாரியன் என்ற மலேசிய செய்தித்தாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

காணாமல் போன எம்.எச்.370 விமானத்தின் விமானிகளில் ஒருவரான ஷஹாரி அஹமட் ஷாவின் வீட்டில் சோதனை நடத்திய போது அங்கு இலங்கை உட்பட்ட 5 விமான ஒடுபாதைகள் தொடர்பான மென்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதில் அமெரிக்காவின் டிகோ கார்சிய விமானப்படை தளமும் உள்ளடங்குகிறது. இதனை தவிர மாலைத்தீவு, இந்தியா ஆகிய நாடுகளின் விமான ஓடுபாதைகளும் குறித்த விமானியினால் அறிந்து வைக்கப்பட்டிருந்ததாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விமான ஓடுப்பாதைகள் யாவும் 1000 மீற்றர் நீளத்தைக்கொண்டவைகளாகும். எனினும் 239 பேருடனான இந்த விமானம் இந்திய உபகண்டத்தில் அல்லது பிரித்தானிய இந்திய கடற்பிராந்தியத்தில் தரையிறக்கப்படவில்லை என்று அமெரிக்கா ஏற்கனவே தெரிவித்திருநதது.

விமானம் காணாமல் போய் 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போது விமானத்தில் பயணம் செய்த 239 பயணிகளினதும், விமானப்பணியாளர்களினதும் தரவுகளை விசாரணையாளர்கள் திரட்டி வருகின்றனர்.

இதேவேளை காணாமல் போன விமானத்தை தேடும் பணிகள் தற்போது கஸக்ஸ்தான், துர்மெனிஸ்டான் மற்றும் தாய்லாந்து கடற்பரப்பு வரையான பகுதியிலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளன.