கிழக்கு பல்கலைக்கழகத்தில் மோதல் : 10 மாணவர்கள் படுகாயம்!!

620

EU

கிழக்கு பல்கலைக்கழகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 10 பேர் படுகாயமடைந்து செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகத்தில் ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற கூடைப்பந்தாட்ட நிகழ்வொன்றில் மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலை மீண்டும் இவ்வாறு கைகலப்பாக மாறியதாகக் கூறப்படுகிறது.

பல்கலைக்கழக முதலாம் ஆண்டு கலைப்பிரிவின் தமிழ் மாணவர்கள் தங்கும் விடுதிக்குள் புகுந்த 4 ஆம் ஆண்டு சிங்கள மாணவர்கள் தடாலடியாக இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.

நேற்று நள்ளிரவு வேளையில் ம துபோதையிலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. தாக்கதலுக்கு பேனாக்கத்தி, மற்றும் மின் அழுத்தி என்பனவும் பாவிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த தமிழ் மாணவர்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையிலும் இரண்டு மாணவர்கள் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸாரும் அதேவேளை கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகமும் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.