
5வது T-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் பங்கதேஷில் நடந்து வருகிறது. மிர்புரில் நடந்த லீக் போட்டியில் ´பிரிவு-2ல் இடம் பெற்ற இந்திய அணி, நடப்பு சாம்பியனான மேற்கிந்திய அணியை எதிர்கொண்டது. நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு டரன் ஸ்மித், கெய்ல் ஜோடி நல்ல தொடக்கத்தை தந்தது. 11 ஓட்டங்களை மட்டுமே எடுத்த ஸ்மித் அதிக நேரம் நிலைக்கவில்லை. இதையடுத்து 34 ஓட்டங்களில் கெய்லும் வெளியேறினார். பின்னர் மிஸ்ராவின் சுழலில் சாமுவேல்ஸ் (18), பிராவோ (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஜடேஜாவின் பந்துவீச்சில் கேப்டன் சமி (11) ரசல் (7) வெளியேற சிம்மன்ஸ் 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இதைதொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவரில், 7 விக்கெட் இழப்பிற்கு 129 ஓட்டங்கள் எடுத்தது. 130 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவானும், ரோகித் ஷர்மாவும் களமிறங்கினர்.
சாமுவேல் பத்ரியின் பந்துவீச்சில் ஷிகார் தவான் டக்-அவுட்டாகி அதிர்ச்சி தந்தார். அடுத்து களமிறங்கிய விராத் கோலி ரோகித் ஷர்மாவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். கோலி 62 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய யுவராஜ் சிங் 10 ஓட்டங்களை மட்டுமே எடுத்து வெளியேறினார்.
இறுதியாக சுரேஷ் ரெய்னாவும், ரோகித் ஷர்மாவும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 19.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து இந்திய அணி வெற்றி பெற்றது.
இப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக அமித் மிஸ்ரா தெரிவுசெய்யப்பட்டார்.





