வவுனியாவில் ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!!

1400

கவனயீர்ப்பு போராட்டம்..

சிறுமி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் உறுப்பினர்கள் மற்றும் சிவில் பெண்கள் அமைப்புக்கள் இணைந்து பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (26.07) காலை குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் மரணித்த சிறுமி ஹிசாலியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும், அரசியல் யாப்பில் 18 வயதிற்கு உட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என கூறப்பட்டுள்ள போதும் அவை தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை,

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் இடைத்தரகர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்,

அத்துடன் சட்டமியற்றும் பாராளுமன்றத்தில் பெண் பிரதிநிதிகளை அதிகரிப்பதன் மூலமே இந்த நாட்டில் பெண்களுக்கு சார்பான சட்ட ஏற்பாடுகளை கொண்டு வந்து முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

இதன்போது ‘அரசே ஹிசாலினியை கொன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி நீதியை வழங்கு, பெண்களை நாட்டின் கண்களாக நினைத்து தீண்டாதிருப்போம்,

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாது அவர்களது உரிமைகளை வழங்குவோம், சிறுவர்களுக்கான பாதுகாப்பை கட்டியெழுப்போம்’ என எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

போராட்டத்தில் வவுனியா நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் பெண் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.