வவுனியாவில் சிறுமி ஹிசாலினிக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்!!

1340

ஆர்ப்பாட்டம்..

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் வீட்டில் பணிப் பெண்ணாக பணிபுரிந்து மரணமடைந்த சிறுமி ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி வேண்டி வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னனியின் வவுனியா மாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (31.07) காலை குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘பாலியல் துஸ்பிரயோகம் என நிரூபிக்கப்பட்டால் பாரபட்சமற்ற தண்டனை வழங்க வேண்டும், சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டும்,

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை உடனடியாக தடை செய்யுங்கள், சிறுமியின் மரணம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

குறித்த சிறுமியின் மரணத்திற்கு ஜனாதிபதியும், அரசாங்கமும் விரைவாக நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.