தொற்று நீக்கும் செயற்பாடு..
கொவிட் பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடு முழுவதும் 41 நாட்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்பட்டு நாளை காலை 4 மணியுடன் தளர்த்தப்பட உள்ளது.
இந்நிலையில் வன்னி பாதுகாப்புப்படை தலைமையக தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய இராணுவத்தினர் வவுனியா நகரின் பொது இடங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பிரதேசங்களில் தொற்று நீக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா நகரப் பகுதியின் பேருந்து தரிப்பிடம், நலன்புரி மையங்கள், அரசு மற்றும் தனியார் வங்கிகள், சந்தைகள், மக்கள் கூடும் இடங்கள், முச்சக்கரவண்டி தரிப்பிடங்கள் போன்ற பொது இடங்களில் இன்று தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நகர சபை பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் நகரசபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தண்ணீர் விசிறி குறித்த பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.