வவுனியா வைத்தியசாலையில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம்!!

1075

பணிப்புறக்கணிப்பு..

வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நான்கு பிரிவினர் சம்பளப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளாவிய ரீதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு ஆதரவாக வவுனியா வைத்தியசாலையிலும் இன்று (09.11) காலை 7 மணி தொடக்கம் நாளை (10.11) காலை 7 மணிவரை குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள், மருந்து கலவையாளர்கள், கதிர்பட இயக்குனர்கள் உள்ளடங்கலாக நான்கு பிரிவினர் குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பளப் பிரச்சனை, மேலதிக கொடுப்பனவு வழங்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு மத்தியிலும் அவசர சிகிச்சைப் பிரிவுகள், விபத்துக்கள் பிரிவு என்பவற்றில் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருவோர் பல்வேறு சிரமங்களையும் எதிர் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.