சதொசவில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதி : மக்களுக்கு விசேட தகவல்!!

1580

சதொசவில் அத்தியாவசிய பொருட்கள்

இருபது வகையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியினை 3998 ரூபாவிற்கு சதொச விற்பனை நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என்று வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

இவ் அத்தியாவசிய பொதியில் சுபிரி சம்பா அரிசி 10 கிலோ கிராம், தலா ஒரு கிலோ சீனி, பருப்பு, இடியப்பமா, 500 கிராம் நெத்தலி, 400 கிராம் நூடில்ஸ் பக்கட், 400 கிராம் உப்பு பக்கட், 330 மில்லி லீற்றர் தேங்காய் பால் பக்கட்டுகள் இரண்டு, தலா 100 கிராம் மிளகாய் தூள்,

மஞ்சள் தூள் உள்ளிட்ட பலசரக்குகள், 100 கிராம் எஸ்.டி.சி. தேயிலை பக்கட், 80 கிராம் சவர்காரகட்டியொன்று, சதொச சந்துன் சவர்க்காரகட்டி, 90 கிராம் சோயா மீட்ஸ் பக்கட், ஆடை சலவை செய்யும் சவர்க்காரம், பப்படம், 10 முகக்கவசங்கள் உள்ளிட்ட 20 பொருட்கள் உள்ளடங்குவதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த பொதியை 3998 ரூபாவிற்கு நுகர்வோருக்கு விநியோகிக்குமாறு சகல சதொச விற்பனை நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகளின் அடிப்படையில் இதன் பெறுமதி 6221 ரூபா, 5834 ரூபா மற்றும் 5771 ரூபாவாகும்.

எனினும் சதொச ஊடாக இதனை 3998 ரூபாவிற்கு பெற்றுக் கொள்வதன் மூலம் நுகர்வோருக்கு 1750 ரூபா இலாபம் கிடைக்கப் பெறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சதொச விற்பனை நிலையங்கள் அற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் 1998 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து பொருட்களை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.