இறக்க அனுமதியுங்கள்… பரபரப்பை ஏற்படுத்திய திருநங்கை ஒருவரின் கோரிக்கை!!

1181

அனீரா கபீர்..

இந்தியாவின் கேரள மாநிலத்தில், இறக்க அனுமதி கேட்டு அரசாங்கத்தை அணுகிய திருநங்கை ஒருவர் தொடர்பில் முழு பின்னணி வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீரா கபீர். 35 வயதாகும் இவர் வேலைக்காக பலமுறை நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டு, நிராகரிக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியமர்த்தப்பட்டார்.

அரசு பள்ளியில் பகுதி நேர வேலையில் பணியயமர்த்தப்பட்ட அனீரா கபீருக்கு இரண்டு மாதங்களில் ஏமாற்றமளிக்கும் அந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் காரணம் ஏதுமின்றி அவரை வேலையில் இருந்து நீக்கியதாக அறிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே, வேறு வழியேதும் இல்லை என முடிவு செய்த கபீர், ஜனவரி மாதம் மாநில சட்ட உதவி சேவைகளை அணுகி, கருணைக் கொலைக்கு அனுமதி கோரி மனு அளிக்க ஒரு சட்டத்தரணியின் ஆலோசனை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த சம்பவம் மாநில நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அவரது நிலை குறித்து மேலதிக தகவல் தெரிந்து கொள்ள அரசு முன்வந்தது.

இந்த நிலையில் அவருக்கு அரசு சார்பில் மீண்டும் ஒரு வேலை ஏற்பாடு செய்து அளிக்கப்பட்டது. பாலக்காடு பகுதியில் பிறந்த அனீரா கபீர் தாம் ஒரு திருநங்கை என அடையாளம் கண்ட பின்னர் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்.

குடும்பத்தினரிடம் இது தொடர்பில் தெரிவிக்கவும் அவரால் முடியாமல் போயுள்ளது. தன்னைப் போன்ற சமூக மக்களுடன் வாழ வேண்டும் என விரும்பி, வீட்டைவிட்டு வெளியேறி பெங்களூரு நகருக்கு சென்ற அவருக்கு கசப்பான அனுபவங்களே மிஞ்சியுள்ளது.

இதில் வெறுத்துப்போன அவர் ஒருகட்டத்தில் சொந்த ஊருக்கே திரும்பியுள்ளார். வேலைக்கான நேர்முகத் தேர்வில் பலமுறை அவமானங்களையே எதிர்கொண்டதாக கூறும் அனீரா கபூர்,

மாணவர்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லக் கூடும் என அஞ்சுவதாக கூறி பல பள்ளி நிர்வாகங்கள் வேலை தர மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.