வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு : பல்வேறு சேவைகள் ஸ்தம்பிதம்!!

1349

பணிப்புறக்கணிப்பு..

சம்பளப் பிரச்சனை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக நாடளாவீய ரீதியில் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் 7ஆம் திகதி முதல் 9 நாட்களுக்கு தாதியர் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதன்காரணமாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

அதன் பின்னர் சுகாதார அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையை இடைநிறுத்தியிருந்தனர்.

இந்தநிலையில் கலந்துரையாடலின் போது எட்டப்பட்ட தீர்மானங்கள் இதுவரையில் நிறைவேற்றப்படாமல் உள்ளதால் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை நாடளாவீய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கு ஆதரவு வழங்கும் வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பணிப்புறக்கணிப்பு இடம்பெறுகின்றது.

மருந்தகம், கதிர் பிரிவு (எக்ஸ்ரே), இரத்த மாதிரி பெறுதல் மற்றும் பரிசோதனை பிரிவு, தொழிநுட்பவியலாளர்கள் பிரிவு என பல பிரிவுகளின் சேவைகளை மக்கள் பெறமுடியாத நிலமை ஏற்பட்டுள்ளதுடன்,

வைத்தியர்கள், தாதியர், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் வெளிநோயாளர் பிரிவு, விடுதிகள், கிளினிக், அவசர சேவைகள் என்பன இயங்கி வருகின்றன.

திடீர் பணிப்புறக்கணிப்பு காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருந்ததுடன் வைத்தியரின் சிபாரிசுடன் மருந்துச் சிட்டைகளை பெற்று தனியார் மருந்தகங்களுக்கு சென்றமையினையும் அவதானிக்க முடிந்தது.