
6வது ஐ.பி.எல் போட்டியில் ஏற்பட்ட சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றில் நடை பெற்று வருகிறது. சூதாட்டம் குறித்து முகுல் முத்தல் கமிட்டி விசாரணை நடத்தி ஏற்கனவே அறிக்கையை சமர்பித்து இருந்தது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட என்.சீனிவாசன் உள்பட 13 பேர் மீது விசாரணை நடத்த தனியாக குழு அமைக்க வேண்டும். அந்த குழுவில் யார் இடம் பெறுவார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட கட்டுப்பாட்டு சபையை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணைக் குழு அமைப்பது குறித்து முடிவு செய்ய கிரிக்கெட் சபையின் அவசர செயற்குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது.
ஷிவ்லால் யாதவ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவை நீதிமன்றில் பரிந்துரை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த குழுவில் இந்திய அணியின் முன்னாள் சகலதுறை வீரர் ரவிசாஸ்திரி, கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.என்.பட்டேல், சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சூதாட்ட விசாரணை குழுவில் ரவிசாஸ்திரி இடம் பெறுவதற்கு அங்கீகாரம் பெறாத பீகார் கிரிக்கெட் சங்க தலைவர் ஆதித்யா வர்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சூதாட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த அவர் இதுகுறித்து கூறியதாவது..
சூதாட்டம் குறித்து சி.பி.ஐ. அல்லது தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை என்பதே எங்களது கோரிக்கை. இந்த விசாரணையை மட்டும் ஏற்போம். ஏனென்றால் முகுல் கமிட்டி விசாரணையை நிராகரிக்கும்போது கிரிக்கெட் வாரியத்தால் நியமிக்கப்படும் குழுவை எப்படி ஏற்க இயலும். நான் ஏற்கனவே சி.பி.ஐ. அல்லது என்.ஐ.ஏ. விசாரணையை வலியுறுத்தி உள்ளேன்.
கிரிக்கெட் வாரியம் பரிந்துரை செய்த குழுவில் ரவிசாஸ்திரி இடம் பெறக்கூடாது. மற்ற இருவர் பற்றி பிரச்சினை இல்லை. ஏனென்றால் ரவிசாஸ்திரி இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஊதியம் பெறும் நீண்டகால ஊழியர் ஆவார். இதனால் அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர் விசாரணை குழுவில் இடம் பெறக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





