சினிமாவை மிஞ்சிய சம்பவம் ; சென்னையில் இலங்கை இளைஞன் அதிரடியாக கைது!!

1193

சென்னை விமான நிலையத்தில்…

சென்னை விமான நிலையத்தில் வயிறில் இரத்தினக் கற்களை கடத்திச்சென்ற இலங்கை இளைஞன் ஒருவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கொழும்பில் இருந்து, 19ம் திகதி ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் சென்னை சென்ற இளஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை ரகசியமாக கண்காணித்தபோது கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்து இறங்கிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளை தீவிரமாக சோதனையிட்டனர். அதில், இலங்கையை சேர்ந்த நைமுதீன் (வயது 28) என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவர் சிறிய பாக்கெட்டுகளாக ரத்தின கற்களை விழுங்கியிருந்தமை தெரியவந்தது.

அதன் பின்னர் அவருக்கு இனிமா கொடுத்து அவற்றை வெளியே எடுத்த போது 56 சிறிய பாக்கெட்டுகளில் பளபளக்கும் ரத்தின கற்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதன்போது சுமார் ரூ.94 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 8 ஆயிரத்து 309 கேரட் கொண்ட 1,746 இரத்தின கற்களை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து இரத்தினக்கற்களை கடத்தி வந்த இலங்கை இளைஞனைகைது செய்த அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.