ஆச்சிபுரம் பகுதியில்..
வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒரு கட்டுத் துவக்கால் சுடப்பட்டும், வாளால் வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று (31.07) மாலை அந்தப் பகுதிக்கு சென்ற ஆயுதம் தாங்கிய குழு ஒன்று அவரைத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கட்டுத்துவக்கினால் அவர் மீது சுடப்பட்டுள்ளதாகவும் அதன் பின் வாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த இளம் குடும்பஸ்தரது உடலில் பலத்த வெட்டுக் காயங்கள் காணப்படுவதுடன், ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்டு அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உடல் முழுவதும் வெட்டுக் காயங்களுடன் சடலம் ஒன்று காணப்படுவதாக சிதம்பரபுரம் பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சா என அழைக்கப்பட்ட யோன்சன் என்ற 30 வயதுடைய இளம் குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார்.
சடலம் சட்டவைத்தியரின் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சிதம்பரபுரம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.