யாழ். பிரபல பாடசாலை ஒன்றில் மாணவிக்கு நேர்ந்த கொடுமை: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

1268

யாழ்ப்பாணம் – மானிப்பாயில் உள்ள தனியார் பாடசாலை நிர்வாகத்தின் செயற்பாட்டினால் கற்பதற்கான உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவி ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

குறித்த பாடசாலையில் இருந்து விலகி பிறிதொரு பாடசாலையில் சேர்வதற்கான இடைவிலகல் விண்ணப்பம் தனக்கு உரிய முறையில் தரவில்லை என்று நேற்று(01.08) முறைப்பாடு செய்துள்ளார்.

அதன் பின் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மாணவி மற்றும் தாய் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மாணவியின் தாய் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததாவது,

“குறித்த தனியார் பாடசாலையில் தனது பிள்ளை மனரீதியாக பாதிக்கும் வகையில் பல செயற்பாடுகள் இடம்பெற்றதை எனது பிள்ளை என்னிடம் தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாக குறித்த பாடசாலையில் கல்வி கற்பதில் எனது பிள்ளைக்கு விருப்பமில்லாத காரணத்தினால் இடைவிலகல் படிவத்தை தருமாறு பாடசாலை அதிபரிடம் கோரிக்கை விடுத்தேன்.

எனது பிள்ளை கொழும்பில் கல்வியை தொடர போவதாக தெரிவித்த நிலையில் அவர்கள் இடைவிலகல் விண்ணப்பத்தை தருவதற்கு இழுத்தடித்தார்கள்.

இதன்போது பாடசாலை நிர்வாகம் இடைவிலகல் விண்ணப்பத்தை தராது பிறிதொரு படிவத்தில் எனது பிள்ளையின் ஒழுக்கம் தொடர்பில் ஆரோக்கியமான வார்த்தையை பதிவிடப்படாதது எனக்கு மன வேதனையை தந்தது.

எனது பிள்ளை, குறித்த தனியார் பாடசாலையை விட்டு விலகி பிறிதொரு பாடசாலையில் சேரக்கூடாதென பழிவாங்கும் நோக்கில் ஒழுக்கவீனம் தொடர்பில் கருத்தை பதிவிட்டுள்ளனர்.

எனது பிள்ளையின் ஒழுக்கம் சரியில்லாமல் இருந்தால் ஏன் இவ்வளவு காலம் எனது பிள்ளையை பாடசாலையில் அனுமதித்திருந்தீர்கள் அல்லது ஒழுக்கம் தொடர்பில் ஏன் எமக்கு கூறவில்லை என கேள்வி எழுப்பினேன் அதற்கு அவர்கள் ஒன்றும் பேசவில்லை.

ஆகவே திட்டமிட்ட முறையில் எனது பிள்ளையை குறித்த தனியார் பாடசாலை பழி வாங்குவதாக நினைக்கிறேன்” என தாய் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் குறித்த மாணவி கருத்து தெரிவிக்கும் போது, “பாடசாலையில் இடம் பெற்ற செயற்பாடுகள் தொடர்பில் தான் மனரீதியாக பாதிப்படைந்த நிலையில் அக்கல்லூரியில் இருந்து விலக முற்பட்டதாக” தெரிவித்துள்ளார்.

“கல்வி அடிப்படை உரிமைகளில் ஒன்றாகக் காணப்படும் நிலையில் விரும்பிய பாடசாலையில் எனது பிள்ளை கல்வியை தொடர்வதற்கு வழி ஏற்படுத்தி தர இடைநிலைக் விண்ணப்பத்தை உரிய முறையில் பெற்றுத்தர வேண்டும் என்பதோடு,

எனது பிள்ளையின் ஒழுக்கம் தொடர்பில் பதிவிட்ட காரணத்திற்கான சான்றையும் கூற வேண்டும் எனக்கோரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம்” என தாய் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.