
டெங்கு நுளம்பு பெருகும் வகையில் பாடசாலை சுற்றுப்புறச் சூழலை வைத்திருக்கும் பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மா நகரசபையின் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பில் கடந்த காலங்களில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதாரப் பிரிவு சுட்டிக் காட்டியுள்ளது.
பாடசாலைச் சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு பல முறை அறிவித்தல் வழங்கப்படடபோதும் சில பாடசாலை அதிபர்கள் இவ்விடயம் குறித்து அக்கறை கொள்ளவில்லை என கொழும்பு மாநகரசபை குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன் காரணமாக பாடசாலை சுற்றுப்புறச் சூழலை அசுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நுளம்பு பெருகுவதற்கு வழிவகுக்கும் பாடசாலை அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கொழும்பு மாநகரசபை சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.





