ஆர்ப்பாட்டப் பேரணி..

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவிகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியோன்று இடம்பெற்றது.

வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று (10.12.2022) காலை 10.30 மணியளவில் ஆரம்பமான இப் போராட்டமானது பஜார் வீதியூடாக ஹொரவப்பொத்தானை வீதியினை சென்றடைந்து ஏ9 வீதியூடாக வவுனியா பழைய பேரூந்து நிலையத்தினை வந்தடைந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மனித உரிமை மீறப்பட்ட நாட்டில் மனித உரிமை தினம் எதற்கு, மனித உரிமை தினம் எமக்கு எதிர்ப்பு தினம், மனித உரிமை மதிக்கப்படாத நாட்டில் மனித உரிமை நிறுவனம் எதற்கு,

தமிழர்களின் உரிமைகளை மறுக்காதே மறுக்காதே , கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர் எங்கே எங்கே போன்ற பல்வேறு கோசகங்களை எழுப்பியவாறும் யுத்தகால மனித உரிமை மீறல்கள் புகைப்படங்கள், கறுப்புக்கொடி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் ஆகியவற்றினை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வருகை தந்து போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.






