கொழும்பில்..
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மதுபோதையில் வாகனத்தைச் செலுத்திச் சென்று காருடன் மோதியதில் ஒன்றரை வயது சிறுமி உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த தந்தையும் 8 வயது மகளும் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் ஒன்றரை வயது மகளும் தாயும் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாய், தந்தை மற்றும் மகள்கள் இருவர் புத்தாண்டுக்கு தேவையான உடைகள் மற்றும் உணவுகளைப் பெற்றுக் கொண்டு காரில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். இதன்போது எதிரே வந்த வேன் ஒன்று திடீரென சாலையை விட்டு விலகி எதிரே வந்த குறித்த கார் மீது மோதியது.
மீகொட பிரதேசத்தில் நேற்று (13) இடம்பெற்ற இந்த விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி மதுபான விருந்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார் என கூறப்படுகின்றது.
விபத்தை ஏற்படுத்தியவர் ஒரு பொலிஸ் சார்ஜன்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேக நபரும் விபத்தில் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.