இரத்தினபுரியில் மண்சரிவில் முத்துமாரியம்மன் ஆலய குருக்களின் இளம் மனைவி பரிதாப மரணம்!!

1436

Mansarivu

இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று முன்தினமிரவு 11. 30 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் அப்பகுதியில் வசிக்கும் ஆலய குருக்கள் ஒருவரின் மனைவி (21) ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

இரத்தினபுரி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெய்துவரும் அடை மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் ஆங்காங்கே மண்சரிவுகளும் தாழ்ப்பகுதிகள் நீரில் நிரம்பியும் காணப்படுகின்றன.

இரத்தினபுரி வேவல்வத்த பொலிஸ் பகுதியில் நேற்று முன்தினமிரவு 11. 30 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் 21 வயதுடைய பெண்ணொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன், மேலும் பெண் ணொருவர் காயமடைந்து கலபட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

கலபட கல்கந்துர தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பிரதம குருக்களின் வீட்டின் மீதே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதில் தங்கியிருந்த குருக்களின் மனைவியான பி.ஜோதிமலர் (21) என்ற இளம் பெண்ணே உயிரிழந்ததுடன், அவரது தாயாரான 58 வயதுடைய வயோதிபரே இதில் படுகாயமடைந்துள்ளார்.

இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்ததினால் இவரால் தப்பமுடியாமல் போயுள்ளது. மேலும் தாயார் கூக்குரலிட்ட காரணத்தினால் வெளியார் வந்து அவரை காப்பாற்றியுள்ளனர்.

இறந்தவரின் கணவரான கோயில் பிரதம குருக்கள் அலுவல் காரணமாக வெளியிடமொன்றுக்கு சென்றிருந்த காரணத்தினால், தனது மனைவியின் துணைக்காக அவரது தாய் அவருடன் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.