வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் உடல் நசுங்கி பலி!!

6911

வவுனியா கன்னாட்டி பகுதியில் பாடசாலைக்கு தனது மகளை அனுப்புவதற்காக சென்றதாயும் அவரது 6வயதான மகளும் ஹென்டர் ரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று (16.06.2023) காலை 7மணியளவில் கன்னாட்டி பகுதியில் இருந்து பூவரசங்குளம் பாடசாலைக்கு செல்வதற்காக குறித்த தாயும் மகளும் அவர்களது வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் பேருந்துக்காக காத்திருந்தனர்.

இதன்போது வவுனியாவில் இருந்து மன்னார் பகுதி நோக்கி வேகமாக பயணித்த ஹெண்டர் ரக வாகனம் வீதியை விட்டு இறங்கி வீதி ஓரத்தில் நின்றவர்கள் மீது மோதியது.

விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மற்றொரு சிறுவன் ஹெண்டர் ரக வாகனத்தை கண்டதும் ஓடிச்சென்று விபத்தை தவிர்த்துக்கொண்டதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவலோகநாதன் சுபோகினி வயது 36, டினுசிகா வயது 6 என்ற இருவரே பலியாகியுள்ளனர்.

குறித்த விபத்து இடம்பெற்ற போது ஹெண்டர் ரக வாகனத்தில் மூவர் பயணித்திருந்தனர். விபத்தை அடுத்து அவர்களில் ஒருவர் தப்பிச்சென்ற நிலையில் ஏனைய இருவரையும் ஊர்மக்கள் விரட்டிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதேவேளை விபத்தையடுத்து பொறுமை இழந்த பொதுமக்கள் டிப்பர் வாகனத்தை சராமரியாக தாக்கி சேதப்படுத்தியதுடன் அதனை எரிப்பதற்கு முற்பட்டனர்.

இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்ப்பட்டிருந்ததுடன் மன்னார் வீதியுடனான, போக்குவரத்தும் சிலமணிநேரங்கள் பாதிக்கப்பட்டிருந்தது.

சம்பவஇடத்திற்கு சென்ற பொலிசார் நிலமையை கட்டுப்படுத்தியதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை பறையநாலங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.