
வவுனியா பத்தினியார் மகிளங்குளம் கிராமத்தில் நேற்று (25.06.2023) மாலை 5 மணியளவில் வீடு புகுந்து திருட முற்பட்ட நபரை பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றினுள் இனந்தெரியாத நபரொருவர் புகுந்து வீட்டிலுள்ள பொருட்களை திருட முயற்சித்த சமயத்தில் வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டமையினையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். எனினும் குறித்த நபரை மடக்கிப்பிடித்த அயலவர்கள் நையப்புடைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றமையுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பல தடவைகள் வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





