குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 விருச்சிகம்!!

391

viruchikam

விருச்சிக இராசி அன்பர்களே 19.6.2014 அன்று குருபகவான் உங்கள் இராசிக்கு 9ம் இடமான பாக்கியஸ்தானத்திற்கு குடிபுக போகிறார்.

“ஓடியவனுக்கு ஒன்பதில் குரு” என்று சிலர் தவறாக கூறுவார்கள்.
ஓடினவனுக்கு அல்ல, ஓட்டினவனுக்கு என்பதே சரி. அதாவது பல விதமான பிரச்னைகளை ஓட்டிவிட்டவனுக்கு ஒன்பதில் குரு. ஆகவே இந்த குரு பெயர்ச்சியால் பல பிரச்னைகளை ஓட்டி வெற்றி பெற போகிறீர்கள்.

உங்கள் இராசிக்கு தன, பஞ்சமாதிபதி அதாவது 2ம் வீடு, 5ம் வீட்டின் அதிபதி, 9ம் இடத்தில் அமர்வது பிரமாதமான யோகமே. உச்சத்தில் அமர்ந்த குரு உங்கள் ஜென்மத்தை பார்க்கிறார். 3ம் இடமான கீர்த்தி ஸ்தானத்தை பார்வை செய்கிறார். 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார்.

பொதுவாக நல்ல யோகத்தை ஜாதக கட்டத்தில் சில இடங்கள் கொடுக்கிறது. இந்த 5ம் இடம் குருவின் பார்வை பெற்றதால், முன்னேற்றத்தில் இருந்த முட்டுகட்டை அகலும். தேவையான வசதி பெருகும். இதுவரை இருந்த அலைச்சல், விரயம், அவப்பெயர் அகலும். உழைப்புக்கு மேல் ஊதியம் கிடைக்கும்.

உயர்பதவியும், குடும்பத்திற்கு தேவையான எல்லா வசதிகளும் வந்தடையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். தடைபட்ட திருமணம் நடைபெறும். வாடகை வீட்டில் இருந்து, சொந்த வீடு செல்ல வழி வகுக்கும்.

விரோதிகளும் அடி பணிவர். பொதுவாக நீங்களே நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வசதிகள் பெருகும். பலநாட்கள் ஏன், பல மாதங்கள் கடன்காரர்களிடம் கைகட்டி கொண்டு இருந்த நீங்கள், கடனை தூக்கி எறிவீர்கள்.

வாகன வசதி உண்டாகும். தந்தை வழியில் சில உதவிகள் கிடைக்கும். செய்யும் தொழிலில் பெரிய அளவில் மாற்றம் செய்ய வசதி பெருகும். புதிய நண்பர்கள் வர வாய்ப்புள்ளது. மேற் படிப்பு, பட்டப்படிப்பு தொடரும்.

வேலை வாய்ப்பு தேடி வரும். சரி, குரு பகவான் என்ன எச்சரிக்கிறார் என்றால், “வரும் பணத்தை பிடித்து வையுங்கள். பணத்தை தண்ணீர் போல் செலவு செய்யாதீர்கள்.” இவைதான் 9ம் இடதின் குரு பகவான் உங்களுக்கு சொல்லும் ஆலோசனை.

விநாயகப்பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வழிபடுங்கள். ஐஸ்வர்ய லஷ்மியின் அருட்பார்வை உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.