குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015 மீனம்!!

425

meenam

மீன இராசி அன்பர்களே 19.6.2014 உங்கள் இராசிக்கு பஞ்சமத்தில் அதாவது 5ம் இடத்திற்கு வந்து குரு பகவான் அமர்க்களமாக அமரப் போகிறார். அடேங்கப்பா இனி தொட்டது எல்லாம் துலங்கும். திடீர் யோகங்கள் வந்து சேரும்.

வழி தெரியாமல் அடர்ந்த காட்டில் அல்லல்பட்டவர்களுக்கு ஒத்தையடி பாதை தென்படுவதுபோல, முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். இதுவரையில் தேவையில்லா மனக்குழப்பத்தை கொடுத்து வந்த குரு பகவான், உங்கள் இராசிக்கு 5ம் வீட்டில் அமர்ந்ததும் இனி நீங்கள் யோகசாலிகள்தான்.

அதுமட்டுமல்ல, உடல்நிலையில் பலசாலியாகவும் திகழ்வீர்கள்.
ஆம். குரு பகவான், 5ம் இடத்தில் அமர்ந்து, உங்கள் ஜென்ம இராசியை பார்க்கிறார்.

அத்துடன் 9ஆம் இடத்தை, அதாவது பாக்கிய ஸ்தானத்தையும், 11ம் இடமான லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். இனி என்ன கவலை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும்.
நோய் நொடியிலிருந்து விடுபடுவீர்கள். நல்ல உடல்நலம் பெறுவீர்கள்.

வாடகை வீட்டில் படாதபாடுபட்ட நீங்கள், இனி சொந்த வீட்டில் மனமகிழ்ச்சியோடும், குடும்பத்தில் தன, தான்யத்தோடும் வாழ்வீர்கள். நல்லவை அனைத்தும் கிடைக்கும். எப்படி சொல்கிறேன் என்றால், 5ம் இடம் யோகமான இடம். கார், பங்களா என்று வசதியாக கூட வாழ வழி செய்வார் குருபகவான்.

பிள்ளைகளின் திருமணத்தை உடனே நடத்தி கொடுப்பார். எதிர்காலம் பற்றி கவலை இல்லை. இனி எல்லாம் நல்ல காலம்தான் என்கிற மனஉறுதியும், தெளிவும் உங்களுக்கு வந்து விடும்.

தெய்வ அனுகிரகத்தால் பல பிரச்னைகள் தீரும். கவலை எல்லாம் பறந்தோடும். உத்தியோகம், வியபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

பொன், பொருள் நன்றாக சேரும். அச்சத்தை போக்குவார் உச்ச குரு. சரி 5ம் வீட்டில் இருக்கும் குரு, இப்போது உங்களுக்கு சொல்ல விரும்பும் ஆலோசனை என்னவெனில், “குருவாகிய நான் உங்களுக்கு எல்லாம் கொடுக்கிறேன்.

நீங்கள் உங்கள் மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.
குழப்பத்தையும், சஞ்சலத்தையும் விடுங்கள். “முடியும்” என்ற எண்ணத்தில் இருங்கள். நீங்கள் முடிசூடா மன்னர்தான்” என்கிறார்.

விநாயகப்பெருமானையும், தட்சிணாமூர்த்தியையும், குருபகவானையும் வணங்கி நம்பிக்கையோடு வெற்றிபடியில் கால் வையுங்கள்.

ஸ்ரீஅஷ்டலஷ்மிகளும் உங்களை தேடி வருவார்கள். வளங்களை வரங்களாக தருவார்கள்.

குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்.