பணிப்பெண்ணாக சென்ற பெண் உயிரிழந்ததை தெரியப்படுத்தாத பயண முகவர்: வெளிவரும் பல அதிர்ச்சித் தகவல்கள்!!

1240

ஹட்டனில்..

கடந்த வருடம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன்-டிக்கோயா,பகுதியை வசிப்பிடமாக கொண்ட 27 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான இராஜேந்திரன் தினகேஸ்வரி என்பவரே உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



குடும்ப வறுமை காரணமாக கடந்த வருடம் சவுதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக இவர் சென்றுள்ளார். இந்த வருடம் 2023.04.05 ஆம் திகதி வரை அவர் தங்களுடன் தொலைப்பேசி ஊடாக தொடர்புகளை பேணியதாகவும் அதன் பிறகு அவரின் தொலைபேசியுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாது போயுள்ளதாகவும் அவரது அத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், பயண முகவருடன் தொடர்புகளை மேற்கொண்ட போது, மே மாதம் 8ஆம் திகதியே தினகேஸ்வரி இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐந்தாம் மாதம் முதல் தாம் இவரின் இறப்பு தொடர்பாக தெளிவினை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிநாட்டு அமைச்சு, பயண முகவர், சவுதி தூதரகம் என அனைத்து இடங்களுக்கு சென்று வந்த போதும், இதுவரை தமக்கு தினகேஸ்வரியின் மரணம் தொடர்பாக எவ்வித உண்மைகளையும் தெரிந்துக்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

தனது மருமகளின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு 10 இலட்சம் ரூபாய் கேட்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.உயிரிழந்த பெண்ணின் இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க தமக்கு எவ்வித உதவியும் இல்லை எனத் தெரிவித்துள்ள குறித்த பெண்ணின் அத்தை,

தனது மருமகளின் மரணம் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவரது சடலத்தை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை சுற்றுலா விசா மூலமே இவர் சவுதி அரேபியாவுக்கு அனுப்பப்பட்டதும் இவரின் கடவுச்சீட்டில் இவரின் அப்பாவின் பெயரான ராஜேந்திரன் என்பதற்கு பதிலாக தாத்தாவின் பெயரான சாமிநாதன் சேர்க்கப்பட்டு தினகேஸ்வரி சாமிநாதன் என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தினகேஸ்வரி வெளிநாட்டிற்கு சென்ற பின்னரே தமக்கு தெரியவந்ததாகவும் அவரின் அத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.