தூத்துக்குடியில்..

தூத்துக்குடி மாவட்டம் கால்டுவெல் காலனி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கணேஷ் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த தங்கதுரை என்பவரது மகளான சுஜாதா என்பவருக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.

Msc., Mphil பட்டதாரியான சுஜாதா தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். திருமணம் ஆகி ஓராண்டாகியும் குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் கணேஷ் சுஜாதாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் வீட்டில் தனித்தனி அறையில் படுத்த நிலையில் இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போடாததை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் வீட்டை தட்டி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து வீட்டின் வெளியறையில் படுத்து இருந்த கணேஷ் எழுந்து உள்ளறையில் படுத்து இருந்த சுஜாதாவை கதவைத் தட்டி எழுப்பியுள்ளார். ஆனால் கதவு திறக்காததை தொடர்ந்து கதவை உடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள நிலை கம்பில் சேலையில் தூக்கு போட்டு சுஜாதா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிரியை தற்கொலை தொடர்பாக அவரது கணவர் கணேசிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடியில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆகி ஒரு ஆண்டிலேயே ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





