வேறு ஜாதி இளைஞருடன் காதல்.. பெற்ற மகளை கழுத்தை அறுத்து சரமாரியாக குத்திக்கொன்ற தந்தை!!

517

பெங்களூரில்..

கர்நாடக மாநிலத்தில் வேறு ஜாதி இளைஞரை காதலித்த தனது மகளை பெற்ற தந்தையே கொடூரமாக ஆணவ கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகளை கொலை செய்த கையோடு, அந்த தந்தை காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். பெங்களூரு விமான நிலையம் அருகே நிகழ்ந்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த தேவனஹள்ளி பிடலூர் கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவருடைய 20 வயது மகள் கவானா. கல்லூரி மாணவியான கவானா இளைஞர் ஒருவருடன் காதல் உறவில் இருந்து வந்துள்ளார்.

இதனை அறிந்த மஞ்சுநாத் மகளின் காதலுகு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் தனது மகளின் காதலன் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதை அறிந்ததும் மஞ்சுநாத்தின் கோபம் மேலும் அதிகரித்தது.

தொடர்ந்து தனது மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார் மஞ்சுநாத். பலமுறை காதலை கைவிடும்படி மகளை எச்சரித்துள்ளார். ஆனால் தந்தை சொன்னதை காதில் வாங்காத கவானா, காதலை கைவிட முடியாது என்றும் அந்த இளைஞரைதான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் பிடிவாதமாக கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவும் காதல் விவகாரம் தொடர்பாக தந்தைக்கும் மகளுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மஞ்சுநாத், கத்தியால் மகளின் கழுத்தை அறுத்துள்ளார். மேலும் கை மற்றும் கால்களில் பலமுறை வெறி தீர கத்தியால் குத்தியுள்ளார்.

பின்னர் மகள் இறந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட மஞ்சுநாத் அருகில் உள்ள விஸ்வநாதபுரா காவல் நிலையத்தில் சரணடைந்தார். கவானா, தனது காதலுக்கு தன்னுடைய தந்தை எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி சமீபத்தில் காவல் நிலையத்தை அணுகியுள்ளார்.

இதையடுத்து பெண்களுக்கான அரசாங்க காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட அவர், எப்படியாவது தனது காதலனை திருமணம் செய்து கொள்வேன் உறுதியாக கூறியுள்ளார்.

இந்நிலையில் வீட்டிற்கு சென்ற கவானா பெற்ற தந்தையால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மஞ்சுநாத் தனது மகளை கொலை செய்ததை அறிந்த அப்பகுதி மக்கள் அவரது வீட்டில் திரண்டனர்.

இந்த கொடூர சம்பவம் பெங்களூரு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் அரங்கேறியுள்ளது. கடந்த மாதம் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் இரண்டு ஆணவ கொலை சம்பவங்கள் நடந்தன. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு ஆணவ கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோலார் மாவட்டத்தில் நடந்த கொலை சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் சித்தராமையா, இந்த குற்றங்கள் ஆழமாக வேரூன்றியிருக்கும் சாதி அமைப்பு, சமூக பழக்கவழக்கங்கள் மற்றும் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக உள்ளது என்று கூறியிருந்தார். மேலும் இதுபோன்ற சம்பவங்களுக்கு தனது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.