வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

1275

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள், மருந்தாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 16.01.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பள அதிகரிப்பு, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 11.01.2024 அன்று பணிப்புறக்கணிப்பில் (சுகயீன விடுமுறை) ஈடுபட்டிருந்த போதிலும் அதற்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறாத நிலையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் இன்று (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை முழுவதும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்நிலையிலேயே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அவசர நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுப்பட்ட சிற்றூழியர்கள் சேவையில் ஈடுபடுவதுடன்,

வெளிநோயாளர் பிரிவு , கிளினிக் பிரிவு, ஸ்கானிங், கதிர் பிரிவு, கதிரியக்கப்பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து சிற்றூழியர்கள், மருந்தாளர்கள், தொழிநுட்பவியலாளர்கள் முற்றாக 24மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக் , வெளிநோயாளர் பிரிவு , மருந்தக பிரிவு ஆகியவற்றிக்கு வருகை மேற்கொண்ட நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.