கள்ளக்குறிச்சியில்..
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 8 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரகோட்டாலத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வனும், ஆரோக்கிய ஷர்மிளா என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர், கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனக்கசப்பு ஏற்பட்ட ஆரோக்கிய ஷர்மிளா தனது தாய் வீட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
8 மாத கர்ப்பிணியான ஆரோக்கிய ஷர்மிளா கள்ளக்குறிச்சியில் தனது தாய் வீடு இருக்கும் ராயபுரம் கிராமத்திற்கு வந்துள்ளார். சிறிது காலம் அங்கேயே தங்கியுள்ளார். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட மனக்கசப்பு சண்டையாக முற்றியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த ஆரோக்கிய ஷர்மிளா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.
அதன்படி, வீட்டில் யாரும் இல்லாத வேளையில், படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதைப் பார்த்த பெற்றோர்கள், உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.