படகு கவிழ்ந்து விபத்து… கடலில் மூழ்கி பலியான 90 பேர்!!

1297

ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கின் வடக்கு கடற்பகுதியில் கூட்ட நெரிசல் காரணமாக சிறு படகு மூழ்கியதில் 90 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்த சம்பவம் வெளியாகியுள்ளது.

சுமார் 130 பேர்களுடன் புறப்பட்ட அந்த சிறு படகு, நம்புலா மாகாணத்திலிருந்து ஒரு தீவை அடைய முயன்றபோது விபத்தில் சிக்கியுள்ளது. சிறு படகில் அதிகமானோர் பயணித்ததும், அது பயணிகளுக்கான படகு அல்ல என்பதும் விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.

மொத்தம் 91 பேர்கள் மரணமடைந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். மரணமடைந்தவர்களில் பலர் சிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை ஐவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், கடலின் சீற்றம் காரணமாக மீட்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலானோர் காலரா பாதிப்புக்கு பயந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் கடந்த அக்டோபரில் இருந்தே காலரா பாதிப்பு நீடித்து வருகிறது.

சுமார் 15,000 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 32 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். உலகின் மிகவும் ஏழ்மை நாடான மொசாம்பிக்கின் நம்புலா மாகாணமே காலராவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருபகுதி நம்புலா பகுதியை சேர்ந்தவர்கள் என்றே கூறப்படுகிறது.