தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!!

449

தீ விபத்தில் சிக்கிய இளம் யுவதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று முன்தினம் (5) இடம்பெற்றுள்ளது.

இதன்போது மன்னார் – பண்டிவிரிச்சான் மேற்கு, மடு பகுதியைச் சேர்ந்த மேரி எமில்தா விக்கிரமரட்ன (வயது 27) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி கடந்த 12.01.2025 அன்று குளிர்காய்வதற்காக அடுப்பினை பற்றவைத்த போது அவரது ஆடையில் தீப்பற்றி தீவிபத்துக்கு உள்ளாகினார்.

இந்தநிலையில் அன்றையதினமே பண்டிவிரிச்சான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதன்பின்னர் 13ஆம் திகதி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.