விபத்து இடம்பெற்ற அதே இடத்தில் மற்றுமொரு விபத்து : ஸ்தலத்தில் ஒருவர் பலி!!

1445

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிரான்குளம் விஷ்னு ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இடத்தில் இன்று(02.04.2025) காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்து மின் கம்பத்தில் மோதியிருந்தது.

அதில் காரைச் செலுத்தி வந்த சாரதி தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளதுடன், கார் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது. மின்கம்பத்தில் கார் மோதியதால் மின்கம்பிகள் அறுந்த நிலையில் அப்பகுதியில் மின்சாரமும் தடைப்பட்டிருந்தது.



இவ்வாறிருக்க, ஸ்தலத்திற்கு விரைந்த மின்சாரசபை ஊழியர்கள், தடைப்பட்டிருந்த மின்சாரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தவேளை,

மோட்டார் சைக்கிளில் தனது மகனுடன் சென்ற ஒருவர் குறுக்கே இருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டுள்ளார். இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழைந்துள்ளார்.

எனினும், அவருடன் பயணித்த மகன் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அதே இடத்தில் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குறித்த மின் கம்பிகள் அறுந்திருந்தாலும் மின்சார பழுதுபார்க்கும் வேலைகள் நடைபெறுகின்றன என்பது தொடர்பாக சமிக்ஞை ஏதுமின்றி மிச்சார சபை ஊழியர்கள் செயற்பட்டதன் காரமாகவே இந்த விபத்துச் சம்பவம் மீண்டும் அதே இடத்தில் இடம்பெற்றதாக அங்குள்ள பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில், ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.