வவுனியாவை சேர்ந்த இருவரை முல்லைத்தீவில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (09.05.2025) இடம்பெற்றுள்ளது
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியாவில் இருந்து இரு நபர்கள் கஞ்சாவினை கொள்வனவு செய்வதற்காக புதுக்குடியிருப்பு நோக்கி வந்துள்ளனர். இவர்களுடன் புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து வியாபாரிகள் பேரம் பேசியுள்ளார்கள்.
இந்நிலையில், இரண்டு கிலோ வரையான கஞ்சாவினை எடுத்துக்கொண்டு மீண்டும் வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த வேளை ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து கற்சிலை மடுப்பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது மீட்கப்பட்ட இரண்டு கிலோ கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் இருவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.