ராஜகுமாரி கொலை வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

501

ஆர். ராஜகுமாரி என்ற பணிப்பெண்ணை அடித்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று முன்னாள் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு தொடர்பில், எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி, முன்விசாரணை ஆலோசனை கூட்டத்தை நடத்த கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு, இன்று(15) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவிட முன் விசாரணைக்கு வந்தது.

இதன்போது, வழக்கு தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட சில ஆவணங்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என பொலிஸார் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோரிய ஆவணங்களை உடனடியாக வழங்குமாறு நீதிபதி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். சமர்ப்பிப்புக்களை பரிசீலித்த நீதிபதி, ஜூலை 21ஆம் திகதி, முன்விசாரணை ஆலோசனை கூட்டத்தை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு, பதுளையைச் சேர்ந்த 41 வயதுடைய ராஜகுமாரி, தான் பணிபுரிந்த பிரபல தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளர் சுதர்மா நெத்திகுமாரவின் வீட்டிலிருந்து தங்க நகைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அவர் உயிரிழந்தார். இது தொடர்பில் அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பி அவர் தாக்குதலுக்கு உள்ளானதாக குற்றம் சுமத்தியிருந்தனர்.

இதனடிப்படையில், வெலிக்கடை பொலிஸில் பணியாற்றிய ஒரு துணை ஆய்வாளர் உட்பட மூன்று அதிகாரிகள் மீது சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.