சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், கல்லூரி மாணவியை கொலை செய்து, காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் ஒரு வீட்டில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 19 வயதுடைய இளம் ஜோடி ஒன்று தங்களுக்கு திருமணமாகி விட்டதாக கூறி, ரூ.4,000க்கு வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10.30 மணிவரை அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாததால், இது குறித்து சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.
அப்போது வீட்டில் இளைஞர் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஐசிஎப் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு இளைஞர் தூக்கில் தொங்கியவாறும், அவருடன் இருந்த இளம்பெண் படுத்த நிலையில் வாய் மற்றும் கண்ணில் ரத்தம் வடிந்தவாறும் சடலமாக கிடந்தனர். இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, விசாரணை நடத்தினர்.
போலீசாரின் தொடர் விசாரணையில், ஒரே வீட்டில் இறந்து கிடந்த இருவரும் கல்லூரி மாணவ-மாணவி என்பதும், அவர்களது பெயர் ஆகாஷ் மற்றும் அபிநயா என்பதும், இருவரும் விழுப்புரத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது.
காதலர்களான இவர்கள் இருவரும், கல்லூரி புராஜெக்ட் தொடர்பாக சென்னை செல்வதாக தங்களது வீடுகளில் கூறிவிட்டு, விழுப்புரத்தில் இருந்து தனித்தனியாக சென்னை வந்து, பெரம்பூரில் பெற்றோருக்கு தெரியாமல் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது காதலி அபிநயாவை ஆகாஷ் தாக்கியுள்ளார். இதில் அபிநயா இறந்துள்ளார். இதனால் பயந்துபோன ஆகாஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது ஒருபுற இருக்க இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனை முடிந்து நேற்று அவர்களது சொந்த ஊரான விழுப்புரத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இச்சம்பவம் சென்னையில் மட்டும் அல்லாமல் விழுப்புரத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.