இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் தேனிலவுக்கு சென்றபோது காணாமல்போன புதுமாப்பிள்ளை, தன் மனைவியின் கூலிப்படையால் கொல்லப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த மே 23ஆம் திகதி புதுமணத் தம்பதியான ராஜா ரகுவன்ஷி, சோனம் மேகாலயாவிற்கு தேனிலவுக்கு சென்றனர். அங்கு சில பகுதிகளை சுற்றிப் பார்த்த அவர்கள் இருவரும் மாயமாகினர். இதனையடுத்து சூன் 2ஆம் திகதி, ராஜா ரகுவன்ஷியின் உடல் மட்டும் ரியாத் அர்லியாங்கில் கண்டெடுக்கப்பட்டது.
ஆழமான பள்ளத்தாக்கில் அவரது சடலம் கிடைக்க, அருகே அவரைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கத்தி ஒன்றும் கிடைத்தது.
பின்னர் அவரது மனைவி சோனமை தேடும் பணி தொடர்ந்தது. ஆனால், திடீர் திருப்பமாக காஜிப்பூரில் உள்ள ஒரு தாபாவில் சோனம் மயக்க நிலையில் மீட்கப்பட்டார்.
உடனே சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அவரிடம் விசாரித்தபோது கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, இரவு நேர சோதனைகளில் மூன்று குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும் இந்தூரில் இருவரும், உத்தரப்பிரதேசத்தில் ஒருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.