வேன் விபத்தில் ஒருவர் பலி : ஆறு பேர் காயம்!!

349

அநுராதபுரம் – இபலோகம பொலிஸ் பிரிவின் ஹிரிபிட்டியாகம சந்திக்கு அருகில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக இபலோகம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று புதன்கிழமை (11) அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் கெக்கிராவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கெக்கிராவை ,அளுத்தென்னாவ,காகம பகுதியை வசிப்பிடமாக கொண்ட 48 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களில் நான்கு பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர்.

காயமடைந்த அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இபலோகம பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் சுபரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.