விமானமொன்று தரையிறங்கும் போது ஏற்பட்ட தீப்பொறி : பதறிய பயணிகள்!!

351

சவூதியில் இருந்து 250 பயணிகளுடன் லக்னோ(Luckmow) வந்த விமானம் தரையிறங்கும் போது சக்கரத்தில் புகை மற்றும் தீப்பொறிகள் காணப்பட்டதால் குறித்த இடம் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

சவூதியிலிருந்து 250 ஹஜ் பயணிகளுடன் புறப்பட்ட SV 3112 விமானம், நேற்றையதினம்(15) இரவு 10:45 மணியளவில் புறப்பட்டு, இன்று காலை 6:30 மணியளவில் லக்னோவில் தரையிறங்கியுள்ளது.

விமானம் தரையிறங்கிய பிறகு ஓடுபாதையில் நகரும் நேரத்தில், இடது பக்க சக்கரத்தில் இருந்து புகை மற்றும் தீப்பொறிகள் வெளியேறுவதை விமான நிலைய பணியாளர்கள் கவனித்தனர்.

வெகு சீக்கிரத்தில் சிந்தித்து நடவடிக்கை எடுத்த விமானி, விமானத்தை நிறுத்தியுள்ளார். விமான நிலையத்தின் தீயணைப்பு மற்றும் மீட்பு அணி (ARFF) உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று 20 நிமிடங்களில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் இருந்த 250 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், விமானத்தில் பயணித்தவர்கள் மத்தியில் பயமும் பதற்றமும் நிலவியுள்ளது. இந்த சம்பவம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 241 பேர் உயிரிழந்த துயரமான நிகழ்வுக்குப் பிறகு நடைபெற்றுள்ளது.

தொடர்ச்சியான இந்த விமான சம்பவங்கள், விமானப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் குறித்து பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளன.