புத்தளம் – வென்னப்புவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உல்ஹிட்டியாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பராமரிப்பாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் வென்னப்புவை பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (16) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 25 மற்றும் 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். கொலைசெய்யப்பட்டவர் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்த வீட்டின் உரிமையாளர் குடும்பத்துடன் இத்தாலியில் வசிப்பதால் கொலைசெய்யப்பட்ட நபர், நீண்ட காலமாக வீட்டை பராமரித்து வந்துள்ளார்.
இத்தாலியில் வசிக்கும் வீட்டு உரிமையாளரின் உறவினர் ஒருவர் வெள்ளிக்கிழமை (13) இந்த வீட்டிற்குச் சென்று பார்த்த போது பராமரிப்பாளர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடப்பதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கொலையாளிகள், வீட்டில் இருந்த பல கோடி ரூபா மதிப்புள்ள வேனை கடத்திச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட வேன் கண்டி – பேராதனை வீதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இனந்தெரியாத இருவர், இந்த வேனை கண்டி – பேராதனை வீதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்பாக நிறுத்தி வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி செல்லும் காட்சிகள் வீதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர்கள் இருவரும் கம்பஹா – சீதுவை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக வேனை கொள்ளையிட முயன்ற போது வீட்டுப் பராமரிப்பாளரை கொலை செய்ததாக சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.