வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் சங்கு கூட்டணியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் கோணேஸ்வரி உபதவிசாளராக போட்டியின்றி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபைக்கான தவிசாளர்,உபதவிசாளர் தெரிவுகள், வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று (27.06.2025) காலை நடைபெற்றது.
இதன்போது தெரிவுகளை ரகசியமாக நடாத்துமாறு தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கு ஆணையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் தேசியமக்கள் சக்தி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி,மற்றும் சுயேட்சை குழு உறுப்பினர்கள் 9பேர் வெளிநடப்பு செய்திருந்தனர்.
சபையில் மீதம் 18 உறுப்பினர்கள் இருந்த நிலையில் அவர்களில் 17 பேர் தெரிவுகளை பகிரங்கமாக நடாத்துமாறு வாக்களித்திருந்தனர். பெரும்பாண்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடாத்தப்பட்டது. அந்தவகையில் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்பட்ட பா.பாலேந்திரனுக்கு ஆதரவாக 17 வாக்குகள் கிடைக்கப்பெற்றது.
அவருக்கு தமிழரசுக்கட்சியின் 5 வாக்குகளும், சங்கு கூட்டணியின் 3 வாக்குகளும், ஐக்கியமக்கள் சக்தியின் 3 வாக்குகளும், ஜனநாயக தேசிய கூட்டணியின் 2 வாக்குகளும், ஈபிடிபியின் ஒரு வாக்கும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஒரு வாக்குகளும், சர்வஜன அதிகாரத்தின் ஒரு வாக்கும் சுயேட்சைக் குழுவின் ஒரு வாக்குமாக17 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டது.
வெற்றிபெறுவதற்கு 14 உறுப்பினர்களின் ஆதரவு போதுமான நிலையில் 17 வாக்குகள் கிடைக்கப்பெற்ற பாலேந்திரன் புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உபதவிசாளராக சங்கு கூட்டணியின் பாலசுப்பிரமணியம் கோணேஸ்வரியின் பெயர் பிரேரிக்கப்பட்டது.
உபதவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் கோணேஸ்வரி உபதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார். இதேவேளை தமிழ்மக்கள் கூட்டணியின் ஒரு உறுப்பினர் தவிசாளர் தெரிவின் போது நடுநிலமை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.