வவுனியா நகரில் ஞாயிற்று கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் வவுனியா பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் ஞாயிற்றுக் கிழமைகளில் அறநெறி வகுப்புக்களைக் கருத்தில் கொண்டு தனியார் கல்வி நிலையஙகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என பலரும் சுட்டிக் காட்டியுள்ளதாக தெரிவித்தார்.
இதன்போது, பதிலளித்த வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன், ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் 10 இற்கு கீழ் தனியார் கல்வி நிலையங்களை நடத்துவதற்கு தடை விதித்து மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தாம் மாநகர எல்லைக்குள் நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் 10 இற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையத்தை நடத்த முடியாது என தீர்மானிக்கப்பட்டது.
இதேவேளை, வவுனியா மாநகர சபையில் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற சபை அமர்வில் ஞாயிற்றுக் கிழமைகளில் தரம் 10 மற்றும் அதன் கீழ் உள்ள மாணவர்களுக்கு தனியார் கல்வ நிலையங்களை நடத்த முடியாது என தீர்மானம் எட்டப்பட்டதுடன்,
10 இற்கு மேற்பட்ட மாணவர்கள் கற்கும் இடஙகளில் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கான மலசலகூட வசதி, குடிநீர் வசதி என்பன இருக்க வேண்டும் எனவும், அதனை சுகாதார பரிசோதகர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.