
வவுனியா நகரப்பகுதிக்குள் இன்றையதினம் யானை ஒன்று நுளைந்தமையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறித்த யானை இன்று (12.07.2025) அதிகாலை தவசிகுளம் தோணிக்கல் வழியாக வவுனியா நகரை டைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இதன்போது தோணிக்கல் பகுதியில் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளதுடன் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் துவம்சம் செய்துள்ளது.

தோணிக்கல் வீதியால் வவுனியா நகரை அடைந்த குறித்த யானை தினச்சந்தைக்கு பின் பகுதியால் வவுனியா குளத்தில் இறங்கியது. இதன்போது சில கட்டடங்களின் மதில்சுவர்களையும் அது சேதப்படுத்தியுள்ளது.
தற்போது வவுனியா குளத்தில் இறங்கிய யானை பலமணிநேரமாக வெளியேவரமுடியாமல் தத்தளித்த வண்ணம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

சம்பவம் தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் யானையை பாதுகாப்பாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
குறித்த யானை வழிதவறி நகரப்பகுதிக்குள் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.





