
நாடு முழுவதும் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், தனது கணவரை பிரிந்து காதலனுடன் வாழ்ந்து வந்த இளம்பெண் விபசாரத்திற்கு மறுத்ததால், காதலியைக் கத்தியால் குத்தி கொடூரமாக கொலைச் செய்த காதலனைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் கோணசீமா மாவட்டம் மெரகபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பா (22). இவருக்கும், நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெற்றோர் நிச்சயித்து திருமணமானது.
திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் புஷ்பா, விஜயவாடாவிற்கு சென்று விட்டார்.
விஜயவாடாவில் தங்கியிருந்த போது, அதே பகுதியில் கார் ஏசி மெக்கானிக்காக பணிபுரியும் ஷேக் ஷாம்(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில், சித்தார்த்த நகரில் உள்ள பி.சவரம் கிராமத்தில் தனியாக வாடகைக்கு ஒரு வீடு எடுத்து, இருவரும் கணவன், மனைவி போல் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் மதுபோதைக்கு ஷாம் அடிமையானதால், பணத்தேவை அதிகரித்ததில், பணம் கேட்டு புஷ்பாவை அடிக்கடி துன்புறுத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் குடிபோதையில் வீட்டிற்கு சென்ற ஷாம், அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், புஷ்பாவை விபச்சாரத்தில் ஈடுபடுமாறும் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த புஷ்பா மறுத்துள்ளார். இதனால் ஷாம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், புஷ்பாவை சரமாரியாக குத்தினார்.
இதில் புஷ்பா ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர் ஷாம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புஷ்பாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ஷேக் ஷாமை தேடி வருகின்றனர்.





