
வவுனியா நெடுங்கேணி துவரங்குளம் பகுதியில் டிப்பர் வாகனம் ஏறியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்றயதினம் இரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. நேற்றயதினம் இரவு உயிரிழந்த குடும்பஸ்தர் தனது வீட்டின் முன்பாக உள்ள வீதியில் உறங்கிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் அந்தபகுதியால் சென்ற டிப்பர் வாகனம் தவறுதலாக அவர்மீது ஏறியுள்ளது. இதனால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சாவடைந்துள்ளார். சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த திலீபன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே பரிதாபமாக சாவடைந்துள்ளார்.
டிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி அவரது உறவினர் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





