
தனது 2 வயது குழந்தையை, மகள் என்றும் பாராமல் தண்ணீர் தொட்டிக்குள் வீசி கொடூரமாக கொன்ற தந்தையைப் போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கோட்டையூரைச் சேர்ந்தவர் பாண்டி செல்வம் (25). இவரது மனைவி வனிதா (24). இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகும் நிலையில், பார்கவி என்ற பெண் குழந்தை இருந்தது.
பாண்டி செல்வம், கப்பலூர் சிட்கோவில் தனியாருக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வந்தார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தம்பதியருக்கிடையே தகராறு ஏற்பட்ட நிலையில்,
கணவரை பிரிந்த வனிதா, கப்பலூரில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. குழந்தை அவருடன் இருந்து வந்த நிலையில் பாண்டி செல்வம் வேலைக்கு வரும்போது குழந்தையை பார்த்துச் சென்று வந்துள்ளார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு காலையில் குழந்தையை அழைத்துக் கொண்டு பாண்டி செல்வம் சென்றார். தான் வேலை பார்க்கும் நிறுவனத்துக்கு அழைத்து சென்றதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே செல்போனில் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதை பார்த்த குழந்தை பார்கவி அழுதுள்ளது. குடும்ப தகராறில் ஆத்திரத்தில் இருந்த பாண்டி செல்வம், அழுத குழந்தையை அடித்து அருகே இருந்த தண்ணீர் தொட்டிக்குள் வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது குழந்தை பார்கவி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தது. உடனே பாண்டி செல்வம், குழந்தையின் உடலை சாக்கு மூட்டையில் கட்டினார்.
பின்னர் ஆலையில் உள்ள ஒரு எந்திரத்தின் அடியில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் எதுவும் தெரியாதது போல் பாண்டிச்செல்வம், திருமங்கலம் காவல் நிலையத்துக்கு சென்று குழந்தையை காணவில்லை என புகாரளித்தார்.
இந்நிலையில் ஆலையில் பணியாற்றும் ஒருவர் நேற்று எந்திரத்தை இயக்க முயன்ற போது, அருகே அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. உடனடியாக இது குறித்து திருமங்கலம் நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அப்பகுதியில் சோதனை செய்தபோது எந்திரத்தின் ஒரு பகுதியில் ரசாயன மூட்டைக்குள் குழந்தையின் உடல் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து மீட்டனர்.
இது குறித்து பாண்டி செல்வத்திடம் போலீசார் நடத்திய விசாரணையில், குடும்ப தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் தனது குழந்தையை கொலை செய்ததை பாண்டி செல்வம் ஒப்புக் கொண்டார். இதையடுத்து பாண்டி செல்வத்தை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.





