
கொழும்பில் இருந்து சீகிரியாவை பார்வையிட சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் பொதியை உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தம்புள்ளையின் பெல்வெஹெர பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சுற்றுலா பயணி ஒருவர் 18 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் பிற உபகரணங்களைக் கொண்ட தனது பொதியை மறந்துவிட்டு சென்றுள்ளார்.
இதனை அறிந்த கடையின் உரிமையாளர், அதனை உரிய நபரிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த டென்னி மார்ட்டின் ஸ்டைம் என்ற சுற்றுலா பயணியே இவ்வாறு பொதியை மறந்து விட்டுச் சென்றுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி தம்புள்ளை, பெல்வெஹெர பகுதியில் உள்ள ஆரியா ரெஸ்ட் உணவகத்தில் மதிய உணவுக்காக குறித்த வெளிநாட்டவர் சென்றுள்ளார்.

இதன்போது பொதியை மறந்த சுற்றுலா பயணி, சிகிரியா பகுதியில் உள்ள ஹோட்டலுக்குத் திரும்பியுள்ளனர்.
தனது அறைக்கு வந்த பின்னரே பொதியை மறந்து விட்டு வந்தமை தெரிய வந்த நிலையில், இது குறித்து தனது சுற்றுலா வழிகாட்டியிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக குறித்த உணவகத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது, பயணப் பொதி அங்கு பாதுகாப்பாக இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து உணவகத்திற்கு சென்று அவுஸ்திரேலிய பிரஜையான சுற்றுலா பயணி தனது பயண பொதியை பெற்றுக்கொண்டார். பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் பாதுகாப்பாக அப்படியே இருந்தமை குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.





