ஜி.வி.பிரகாஷ் – சைந்தவிக்கு விவாகரத்து வழங்கி குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு!!

706

ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட திரையுலகின் காதல் ஜோடிகளில் ஒன்றான இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவருக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் நேற்று மாலை தீர்ப்பு அளித்துள்ளது.

வகுப்பு நண்பர்களான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி, காதல் ஜோடியாக தங்களது இல்லற வாழ்க்கையை சந்தோஷமாக துவங்கியவர்கள், திடீரென தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷும் பாடகி சைந்தவியும் பிரிவதாக கடந்த 2024ம் ஆண்டு அறிவித்தனா்.

அதன் பின்னர் இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடா்பாக இருவரும் முடிவெடுக்க 6 மாத கால அவகாசம் வழங்கி இருந்தது.

6 மாத கால அவகாசம் முடிந்து, சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வசுந்தரி முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். இருவரும் இனி தாங்கள் சோ்ந்து வாழ விரும்பவில்லை என்றும் இருவரும் பிரிந்து வாழவே விரும்புவதாக தனித்தனியாக நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.

அப்போது குழந்தையை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். இதை நீதிபதி பதிவு செய்து கொண்டு நேற்று தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் – பாடகி சைந்தவி இருவருக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.