ராமாயணம் தொடரில் குழந்தை நட்சத்திரம் தீ விபத்தில் மூச்சுத்திணறி பலி : சகோதரரும் உயிரிழப்பு!!

499

ஸ்ரீமத் ராமாயணம் தொடரில் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரம் வீர் ஷர்மாவும், அவரது சகோதரரும், வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 4வது மாடியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த வீர் ஷர்மா, குடும்பத்தினருடன் இரவு வீட்டில் அனைவரும்

தூங்கிக் கொண்டிருந்த போது மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் புகைமூட்டம் சூழ்ந்ததால் மூச்சு திணறி உயிரிழந்தார். வீர் ஷர்மாவின் சகோதரர் செளர்யா ஷர்மாவும் இந்த தீ விபத்தில் உயிரிழந்தார்.

தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்றின் ஆசிரியரான இவரின் தந்தை இந்த தீ விபத்து சம்பவத்தின் போது பஜனைக்காக கோவிலுக்குச் சென்றிருந்தார். வீர் ஷர்மாவின் தாயார் ரீடா ஷர்மாவும் நடிகை என்பதால், மும்பையில் படப்பிடிப்பு ஒன்றில் இருந்துள்ளார்.

வீட்டில் வீர் ஷர்மா தனது சகோதரருடன் தனியாக இருந்த போது நள்ளிரவு 2 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. ஜன்னல் வழியாகப் புகை வெளியே வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர்,

தீ விபத்து குறித்து சர்மாவின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு உள்ளே மூச்சுத் திணறலில் இருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்து விட்டனர். மும்பையில் உள்ள அவரின் தாயார் மருத்துவமனைக்கு வந்ததும் அவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. குடும்பத்தின் விருப்பப்படி சிறுவர்களின் இருவரின் கண்களும் தானமாக வழங்கப்பட்டன.

சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ரீமத் ராமாயணம் தொடரில் நடித்து புகழ் பெற்றவர் குழந்தை நட்சத்திரம் வீர் ஷர்மா.

இவர் வீர ஹனுமான் தொடரில் லட்சுமணனாகவும் நடித்தவர். சைஃப் அலிகான் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தில் சிறு வயது சைஃப் அலிகானாகவும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.