உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்து – ஒருவர் பலி!!

558

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலாவடி சந்தி பகுதியில் நேற்று (02) இரவு வேளையில் உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

12 கொளனி பகுதியில் இருந்து சம்மாந்துறை நோக்கி excavator” ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை விலாவடி சந்தி பகுதியில் வலது பக்கமாக முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கவனக்குறைவால் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் சம்மாந்துறை மலையடிக்கிராமம் 03 பகுதியைச் சேர்ந்த 20 வயதுடையவர் ஆவார்.

சம்மாந்துறை மலையடிக்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய உழவு இயந்திர சாரதியை சவளக்கடை பொலிஸார் கைதுசெய்து உழவு இயந்திரத்தையும் கைப்பற்றி உள்ளனர்.

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரின் உத்தரவிற்கமைய சவளக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவுப் பொறுப்பதிகாரி சகிதம் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்குச்சென்று விசாரணைகளை மேற்கொண்டார்.

விபத்தில் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக குறிப்பிட்டு மரண விசாரணைகளின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்கப் பணித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தில் சவளக்கடை பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைதான சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.